எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு.அதாவது எப்போது சாப்பிட அமர்ந்தாலும் ஒருகையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும்.அது வார,மாத இதழாகவோ அல்லது எதுவும் கிடைக்காதபொழுது ஒரு வருடத்துக்கு முற்பட்ட செய்தித்தாள்களைக் கூட வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன்.இந்த பழக்கம் எந்த வயதில் ஆரம்பித்தது என சரியாகத் தெரியவில்லை.ஆனால் இன்றளவும் இந்த பழக்கத்தை விடமுடியாமல் வீட்டில் சாப்பிட அமர்ந்தால் தொடர்கிறேன்.அம்மாவும் ஆரம்பத்திலிருந்தே அன்பாக,வேண்டுகோளாக கொஞ்சம் அதிரடியாக கூட மிரட்டிப் பார்த்துவிட்டார்கள். எனது ஒல்லியான உடல்வாகை காரணம்காட்டி நீ சாப்பிடும்போது கையில் புத்தகம் இல்லாமல் சாப்பாட்டில் கவனம் வைத்து சாப்பிட்டு பார்.ஒரே மாதத்தில் குண்டாகிவிடுவாய் என கஷ்டப்பட்டு யோசித்து புதுபுது கதைகளாக கூட சொல்லிப் பார்த்தார்கள். ம்ஹீம்.. பிரயோஜனமில்லை..அவர்களுக்கே அலுத்துப்போய் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.இப்போதெல்லாம் வீட்டில் சாப்பாட்டு நேரத்தில் தட்டில் சாப்பாட்டைப் போட்டுவிட்டு அவர்களாகவே இந்த புத்தகம் இந்த வாரம் வாங்கியது இங்கேயிருக்கிறது என புத்தகம் இருக்குமிடத்தையும் சொல்லிவிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்பினால் நம்புங்கள்.எனக்கு முதன்முதலில் புத்தகங்களுடன் பரிச்சயம் ஏற்பட்ட வயது 5.அப்போது பிரபலமாக இருந்த சிறுவர்மலர்,கோகுலம்,பூந்தளிர்,ரத்னபாலா,அம்புலிமாமா என ஆரம்பித்த எனது புத்தகதாகம் 10 வயது வரைக்கும் அவைகளுடனேயே தொடர்ந்தது.பின்னர் ஹைஸ்கூல் சேர்ந்தவுடனேயே எனது புத்தகஅறிவு விரிவடைந்து ஆனந்தவிகடன்,குமுதம்,குங்குமம் என தொடர ஆரம்பித்தது.இப்படியே ஒரு இரண்டு வருடங்கள் ஓடியபிறகு எனக்கு நாவல்கள் அறிமுகமாகின.அதிலும் குறிப்பாக துப்பறியும் நாவல்கள்.ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா ஆகியோரின் எழுத்துநடை கண்டு வியந்துபோவேன்.நம்ம இந்திரா சௌந்திரராஜன் கொஞ்சம் லேட்டாகத்தான் அறிமுகமானார்.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நம்ம தலைவர் மாதிரி ஒவ்வொரு நாவலிலும் சும்மா கலக்கியிருந்தார்.இன்றைக்கு வரைக்கும் இவரின் எந்த நாவலை படிக்க ஆரம்பித்தாலும் முழுநாவலையும் ஒரேமூச்சில் படித்துவிடுவேன்.அவ்வளவு அற்புதமான எழுத்துநடை கொண்டவர்.சமீப காலங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.இவரின் துணையெழுத்து படித்தபோது சில இடங்களில் மனதை பிழியவைத்து விட்டார்.
இனிவரும் பதிப்புகளில் நான் இதுவரை படித்த புத்தகங்களிலிருந்து என்னைக் கவர்ந்தவை பற்றி இங்கே பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.
25.11.07
புத்தகங்கள்
பதித்தது பக்கோடா at 8:00 pm 3 திட்டுக்களும்,பாராட்டுக்களும்
Labels: புத்தகங்கள்
புனைப்பெயர்(பக்கோடா) வந்த கதை-1
சரி எழுதணும்னு வந்தாச்சு.எழுத்தாளன் அப்படின்னா ஒரு புனைப்பெயர் இருக்கணும்ல.. சரி ஊர்பேரை போடலாம்னா சிபி அண்ணன் கொலைவெறியோடு மவனே! ஊர்ப்பக்கம் வந்துபார்ரா.. உனக்கு இருக்கு.ன்னு துரத்துவாரு. அதனால் கடைசியா நின்னுக்கிட்டு,உட்கார்ந்துகிட்டு,படுத்துக்கிட்டு... இன்னும் எப்படியெல்லாமோ யோசிச்சு கண்டுபிடிச்சது இந்தப் பெயர். இந்த பக்கோடா என்ற பெயர் கல்லூரி நாட்களில் ஒருசில மாதங்களுக்கு எனது ஒரிஜினல் பெயரை மறக்கடிக்கும் அளவுக்கு கொடிகட்டி பறந்தது.அந்த காமெடியை நீங்களும் கேட்டு பிடிச்சு தொலைச்சுதுன்னா ஒரு பின்னூட்டத்தைப் போட்டுவையுங்க.. பிடிக்கலைன்னா அட கருமமே என்ன இது பினாத்தல்ன்னாவது திட்டி ஒரு பின்னூட்டத்தைப் போட்டு வையுங்கண்ணா....
நான் ஒரு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையில்(தமிழ்படுத்தியது சரியாங்ண்ணா...) ஒரு பொறியியல் பட்டதாரி.கல்லூரி நாட்களின் முதல் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளைப் பொருத்தவரைக்கும் நான் ரொம்பவே நல்லப்பையன்.(அட நிஜமாத்தாங்க..).ஏதோ பழம்,சொம்பு அப்படியெல்லாம் நல்லப் பசங்களைச் சொல்லுவோமே.. அப்படித்தான் நானும் இருந்தேன்.மூன்றாம் ஆண்டின் இறுதியில் மச்சான் என்னடா இப்படியிருக்கே?.. ஒவ்வொருத்தனையும் பாரு.. எப்படியெல்லாம் என்ஜாய் பண்றானுங்க..காலேஜ் லைஃப்பையே நீ வேஸ்ட் பண்றடான்னு அறிவுரை ஆற்றிய ஒரு நல்ல நண்பனின்(?) பேச்சைக்கேட்டதால் வந்தவினை.என்னடா இப்படி சொல்றாங்களேன்னு மூளைக்கு ஓவர்லோடு வேலை கொடுத்து யோசித்துக் கொண்டிருந்த பொழுதே மார்கழி மாதத்தின் பனிகொட்டிய ஒரு சுபயோக சுபதினத்தில் இரவு 10 மணிக்குமேல் மொட்டைமாடியின் நிலவொளியில் பியரை காட்டி இதெல்லாம் இப்போ கூல்டிரிங்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்திருச்சு நண்பா.. என ஊற்றிக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டான் ரூம்மேட்டாக தங்கியிருந்த இன்னொரு நண்பன்(குருன்னு சொன்னா சரியா இருக்குமா?). அந்த முதல் அனுபவத்தை எல்லாம் பின்னால் இன்னொரு தொடரில் சொல்கிறேன்.டிராக் மாறுகிறமாதிரி இருக்கு.. மெயின் டிராக்குக்கு போவோமே..
அது கல்லூரி படிப்பின் கடைசி வருடம்.பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குரிய நல்ல பழக்கங்களில்(?) ஒன்றிரண்டை கற்றுக்கொண்டு நானும் இப்பொழுது முழு மாணவனாக மாறியிருந்தேன். இப்பொழுது நான் வேறுஅறைக்கு மாறியிருந்தேன்.6 பேர் இருந்த பெரியவீடு அது.அதில் நால்வர் என் வகுப்புதோழர்கள்.மற்றொருவர் வேறு துறையைச் சார்ந்தவர்.வயதிலும் மூத்தவர். ஏற்கனவே பணியாற்றிவிட்டு படிப்பின்மேல் இருந்த தீராத காதலால்(!) நேரடியாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவர்.எனக்கு அவ்வளவாக பழக்கமில்லாதவர் என்பதாலும்,வயதில் மூத்தவர் என்பதாலும் நான் அவரிடம் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருந்தேன்.அந்த 2 மாதத்தில் ஏதாவது அவராக கேட்டால் ஆம்,இல்லை என்பதைத்தவிர அதிகம் பேசியதாக நினைவில்லை.அவரை உடன்பயிலும் ஒரு மாணவியுடன் இணைத்து ரூமிலுள்ள அனைவரும் கலாய்க்கும்போதும்கூட சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கிட்டிருப்பேன்.ரூமுக்கே தலைன்னு வைச்சுக்ங்களேன்.. அவருக்கு அவரின் பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் ரமேஷ். நண்பர் கூட்டத்தில் வைக்கப்பட்டதோ "மச்சி". எனது நினைவுக்கு எட்டியவரை இன்றளவும் அவரை யாரும் ரமேஷ் என்று சொல்லிக் கூப்பிட்டுக் கேட்டதில்லை.இப்படியே போய்க் கொண்டிருந்தபோது 5வது செமஸ்டரின் முடிவுகள் வந்தன.ரூமில் எல்லோரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்க அந்த மகிழ்ச்சியை அன்று கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எனக்கோ உள்ளூர பயம்.ஏனென்றால் ஏதோ ஆசைக்கு சில பழக்கங்களை பழகியிருந்தாலும் இதுவரைக்கும் பெரிய தலைகளுடன் சபையில் அமர்ந்து அருந்தியதில்லை. ஏன் யோசிச்சேன்னா நம்ம கேரக்டர்படி சும்மாவே கொஞ்சம் நகைச்சுவையான ஆளு. இதுல கொஞ்சூண்டு சரக்கு உள்ளே போயிடுச்சின்னா அம்புட்டுதேன்.. கைப்புள்ள வடிவேலு கணக்கா அலம்பலை ஆரம்பிச்சுடுவோம்ல... அதேன்.. இவங்ககூட குறிப்பா மச்சிகூட உட்கார்ந்து வழக்கம்போல நம்ம அலம்பலை காட்டப்போய் ஒண்னுகிடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா அப்படிங்கிற பயம்தேன்.ஒருவழியாக மச்சியே தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி இதில் என்னப்பா இருக்கு? சபைன்னு வந்ததுக்கப்புறம் எல்லாருமே ஒண்ணுதான்.இதிலே என்ன வயசு வித்தியாசம்லாம் பார்த்துக்கிட்டு இருக்கே? நான் ஒன்றும் தப்பா நினைச்சுக்க மாட்டேன் வா..அப்படின்னு பெரிய லெக்சர்லாம் கொடுத்து தயக்கத்தைப் போக்கி அழைத்துச்சென்றார்.நானும் நேர்ந்துவிட்ட பலியாடு போல் அவர்பின்னால் நடக்கத் துவங்கினேன்.
விதி வலியது என்பார்கள். ம்ம்... விதியை யாரால் மாற்றமுடியும்?
(தொடரும்)
பதித்தது பக்கோடா at 7:58 pm 0 திட்டுக்களும்,பாராட்டுக்களும்
Labels: புனைப்பெயர்(பக்கோடா) வந்த கதை
வலைப்பூ தொடங்கிய கதை
இஞ்சினியரிங் முடித்தவுடனேயே சென்னைக்கு மூட்டைகட்டிக்கிட்டு கிளம்பி வந்தாச்சு.வந்தாரை வாழவைக்கும் சென்னை என்னை மட்டும் கண்டுகொள்ளாமல் நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்தது.கடைசியில் இங்கே வா நண்பா நான் இருக்கிறேன் உனக்கு அள்ளித்தர என ஐதராபாத் அழைக்க அடுத்த நிமிடமே யோசிக்காமல் ஒத்துக்கொண்டேன்.ஏதோ தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டேன்.தமிழ்தான் நமக்கு கைவந்த கலையாச்சே.ஆங்கிலமோ சமாளிக்கும் அளவுக்கு போதுமானதாக இருந்தது.தெலுங்கில் எனக்கு தெரிந்த ஒரே வார்த்தை தெலுங்கு என்பது மட்டும்தான்.இந்தி மொழியோ கிலோவுக்கு எவ்வளவு நிற்கும் என கேட்கும் ஆள்.ஒருவழியாக ஐதராபாத்துக்கு வந்து ஒரு ஆண்கள் விடுதியில் செட்டிலும் ஆயாச்சு.ஆனால் நமக்குதான் எங்கே போனாலும் சனிபகவான் சுத்திசுத்தி அடிப்பாரே.சென்னையிலிருந்து கிளம்பி என் பின்னாலேயே ஐதராபாத்தும் வந்துவிட்டார்.எனக்கு ஒதுக்கப்பட்ட அறை இருவர் தங்ககூடியது.அதில் ஏற்கனவே ஒரு ஆந்திர நண்பர் தங்கியிருந்தார்.நான் வருவதற்கு முன்னால் ரொம்பநாளாக தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்திருப்பார் போலிருக்கிறது.அறைக்குள் நுழைந்தவுடனேயே முதல் பார்வையிலேயே ஏதோ தெலுங்குபட ஹீரோ வில்லனை முறைப்பதுபோல் கோபப்பார்வை பார்த்தார்.ஒருவழியாக சமாளித்து ரூமில் ஒருவாறாக செட்டிலாகிவிட்டேன்.அடுத்துவந்த நாட்களிலும் என்னை தவிப்பதிலேயே கவனமாக இருந்தார்.நானும் முதல் மூன்று நாட்கள் புதிய வேலை,புது அலுவலகம் என சற்று பிஸியாக இருந்ததில் ஓடிவிட்டது.அன்று சனிக்கிழமை.வார விடுமுறை நாள்.நம்ம சனி பகவானுக்குதான் ரொம்பவும் பிடித்த நாளாயிற்றே.. வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.நமது அறை நண்பருக்கும் அன்று விடுமுறை.வேறுவழியே இல்லை.இன்னும் 48 மணி நேரத்துக்கு அவருக்கோ அல்லது எனக்கோ நேரம் சரியில்லை.பிள்ளையார் சுழிபோட்டு நானே பேச்சை ஆரம்பித்தேன்.பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு அவர் MCA முடித்து இப்போது ஒரு பிரபலமான MNC யில் பணியாற்றுவது தெரிந்தது.எனக்கோ பேச்சுதுணைக்கு நமது துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவரே கிடைத்த நிம்மதி.எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு அவரை ஒரு அரைமணி நேரத்துக்கு பாடாய்படுத்திக் கொண்டிருந்தேன்.அவர் நேரம் நல்லநேரம் போல.அவரது செல்போனில் ஒரு அழைப்புவர செல்போனை கையில் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர்தான்.அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆளையே கண்ணில் பார்க்க முடியவில்லை.நள்ளிரவில் வந்து தூங்கிவிட்டு காலையில் நான் கண் விழிப்பதற்கு முன்னாலேயே காணாமல் போய்விடுவார்.இரண்டு வாரங்களாக இது தொடர்ந்தது.வார நாட்களிலும் அலுவலகம் முடிந்து வந்தபிறகு இரவில் ஒன்று தலைவலி என காரணம்கூறி விரைவில் தூங்கிவிடுவார் அல்லது தூங்குவதுபோல நடிப்பார்.நானோ விக்கிரமாதித்தன் தோளில் தொங்கும் வேதாளம் போல விடாது கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தேன்.அவரோ வாலி படத்தில் அஜீத் கேரக்டர் நியாபமிருக்கிறதா? தான் ஊமை எதிரேயிருப்பவருக்கு தெரியக்கூடாது என வாயில் சிக்லெட்ஸ் போட்டு மென்றுக்கொண்டே ம்.. ம்.. என சொல்லுவார்.நமது அறை நண்பரும் ஒரு கட்டத்திற்கு பிறகு அதே பாணியைத்தான் கையாண்டார்.என்ன இங்கே சிக்லெட்ஸ்க்கு பதிலாக மெண்டோ ஃபிரெஸ்.எனக்கோ உலகமே வெறுத்துவிட்டது.என்னடா நம்ம அவ்வளவு மோசமாகவா ஆங்கிலம் பேசுகிறோம் என்ற கவலைவேறு தொற்றிக்கொண்டது.அந்த குழப்பங்களுக்கெல்லாம் அந்தவார இறுதியில் விடைகிடைத்தது.அன்று சனிக்கிழமை.காலையிலிருந்தே நண்பர் மிகவும் பரபரப்பாக இருந்தார்.விஷயம் வேறொன்றுமில்லை.நமது நண்பருக்கு அன்று ஒரு இண்டர்வியூ.அதுவும் எப்படி? தொலைபேசிவழியாக நடந்தது.எனக்கும் ரொம்ப போரடித்ததால் அந்த இண்டர்வியூவை உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.முதல் 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது.நண்பரின் ஆங்கிலப்புலமை.தமிழ் மீடியத்தில் படித்துவந்த நாமெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.அப்படியிருந்தது அவரது ஆங்கிலபுலமை.(நண்பர் ஆங்கில மீடியத்தில் படித்தவராம்)ஓ இதுதான் விஷயமா? இதற்காகத்தான் தினமும் மெண்டோ ஃப்ரெஸை மென்று தள்ளுகிறார் என்பதும் நமது அறிவுக்கு சற்று தாமதமாகவே புலப்பட்டது.சரி அவரை ஏன் கஷ்டப்படுத்தனும்னு ஒருமூன்று நாள் எதையும் கேட்காமல் அமைதியாக இருந்தேன்.ரொம்பவும் போரடிக்கவே கடைசியில் லேப்டாப்பிற்கு இண்டர்னெட் கனெக்ஷனும் வாங்கிவிட்டேன்.ஊரைவிட்டு 800 கிலோமீட்டர் தள்ளி வந்ததாலேயோ என்னவோ தெரியலை.. இந்த தடவை தமிழ்மேல் அவ்வளவு ஈர்ப்பு.கூக்லி நண்பரின் துணைகொண்டு தேடிக்கொண்டே இருந்ததில் கடைசியாக வலைப்பூக்களுக்கு ஒரு இணைப்புபாதையை காட்டினார்.சென்னையில் இருந்தப்பவே இந்த வலைப்பூ பக்கங்களில் எனக்கு அறிமுகம் இருந்தபோதிலும் அவ்வப்போது வந்து என்ன நடக்கிறதென்று எட்டிப்பார்த்துவிட்டு போவதோடு சரி.நம்மளும் சொந்தமாக ஒரு வலைப்பூ உருவாக்கலாம்னு மனசில் இருந்த திட்டம் சோம்பேறித்தனத்தால் நீண்டநாளாக நிறைவேறாமல் இருக்கும் சேலம்-கரூர் அகல ரயில்பாதை கணக்கா(அப்பாடா பப்ளிக்குக்கு ஒரு மெசேஜ் சொல்லியாச்சு. ரைட்டா சிபி அண்ணா) இழுத்துக்கிட்டே போய்க்கிடிருந்தது.கடைசியில் அறைநண்பரை அதற்குமேல் கஷ்டப்படுத்த விரும்பாமல் மளமளவென வேலைகளைத் தொடங்கி வலைப்பூவையும் ஆரம்பித்து தினமும் பதிவுகள் போடவும் ஆரம்பித்துவிட்டேன். இந்த பதிவுகளால் நீங்கள் பயனடைகிறீர்களோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் இந்த வலைப்பூ ஆரம்ம்பிப்பதற்கான தொடக்ககட்ட வேலைகளில் இருக்கும்பொழுதே இதனால் பலனடைந்த ஒரு உடனடி பயனாளியை நேரில் பார்த்தேன்.அவர் வேறு யாருமல்ல என் அறை நண்பர்தான்.ஆம் எனது அறைநண்பர் இப்போது தூங்கும்பொழுதுகூட சிரித்துக் கொண்டேதான் தூங்குகிறார். மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை அவருக்கு.பின்னே இருக்காதா? தினமும் பதிவுகள் போட டைப்செய்ய ஆரம்பித்ததிலிருந்து நான்தான் அவரை ஏதும் கேள்விகேட்டு தொந்தரவு செய்வதில்லையே? ஒருநாள் அவர் ஆவலை அடக்க முடியாமல் என்ன எப்போதும் டைப் செய்து கொண்டேயிருக்கிறாய் எனக்கேட்க பொறுமையாக வலைப்பூ பற்றி எடுத்துக்கூறினேன்.புரிந்ததோ இல்லையோ பலமாக தலையாட்டிக் கொண்டிருந்தார்.
பின்குறிப்பு -- அடுத்தநாள் காலை விடிந்ததும் குளித்துவிட்டு முதல் வேலையாய் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு வந்தார்.(ஒருவேளை வலைப்பூவை உருவாக்கி அவர் கஷ்டத்தை போக்கியதற்காக கூக்லி பேரில் அர்ச்சனை செய்திருப்பாரோ...)
எது எப்படியோங்க நம்மால் ஒரு நான்குபேர் கவலைகளை மறந்து ஒரு 2 நிமிஷம் சந்தோஷமாக இருந்தால் அதுவே நமக்குப்போதும். என்ன நான் சொல்றது?
பதித்தது பக்கோடா at 7:55 pm 0 திட்டுக்களும்,பாராட்டுக்களும்
எல்லோருக்கும் வணக்கங்கண்ணா...
சரி வந்தாச்சு.. ஆரம்பிச்சாச்சு.. என்ன எழுதுறது? யோசிச்சுப் பார்த்தா எதை எழுதினாலும் நல்லதோ,கெட்டதோ படிச்சுட்டு திட்டறதுக்கு நீங்க எல்லாரும் இருக்கிங்க.ஒரு தடவை கல்லூரி நாட்களில் சும்மா விளையாட்டுக்கு ஒரு கைரேகை ஜோசியரிடம் கையைக் காட்டப்போக அவரோ தம்பி.. நீங்க பிற்காலத்தில் பெரிய எழுத்தாளரா வருவிங்க... என்று பிட்டைப்போட இதோ இங்கே அதற்கான முதல்படி எடுத்து வைத்தாயிற்று... ஆகையால் திட்டனும்னு நினைச்சிங்கனா ஒரு எக்ஸ்ட்ரா காப்பி போட்டு அந்த மருதமலை கைரேகை ஜோசியருக்கு ஒன்று அனுப்பிடுங்க.. சரியா?
இதோ 25 வயசாயிடுச்சு.இதுவரைக்கும் யோசிச்சுப் பார்த்தா சாதனைன்னு சொல்லிக்கிற அளவுக்கு ஒன்றுமே செய்யவில்லை.சரி எதையாவது எழுதனுமே என்ன செய்யலாம்? சரி இந்த 25 வருட வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோமே.கூடவே படித்தது,பிடித்தது எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வோம் சரியா...
நான் ஒன்றும் விலாவரியாக ஆதாரங்களுடன் எடுத்துக்கூற "ஆனந்தவிகடன் மதனோ", ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி(கிறுக்கி) கவிதையென கைதட்டி ரசிக்கவைக்கும் "பார்த்திபனோ" கிடையாது.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.என்னால் முடிந்தவரையில் தெளிவான நடையில் எழுத முயற்சிக்கிறேன்.
சில நேரங்களில் இதையெல்லாம் பார்க்கும்பொழுது சிரிப்பாகவும் அட பைத்தியக்காரத்தனமாகவும் கூடத் தோன்றுகிறது.நான் ஏன் இப்படி எதையாவது எழுதிக்(கிறுக்கிக்)கொண்டேஇருக்கிறேனென்று? எனக்கே இப்படியெல்லாம் தோன்றும்பொழுது உங்களுக்கு...???????
இதுவரையில் என்வாழ்வில் நான் சந்தித்த நிகழ்வுகளை தனிமையில் அமர்ந்து எழுதி உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் நான் சற்று இளைப்பாறுகிறேன்.என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.ஏதோ அரிப்புக்கு "Itch Guard" கிடைத்தது போல... என்ன சரிதானே?
பின்குறிப்பு: அட சொல்ல மறந்துவிட்ட இன்னொரு முக்கியமான விஷயம்.ரொம்ப நாளாகவே ஒரு வலைப்பூ சொந்தமாக ஆரம்பித்து எல்லோரையும் இம்சைப்படுத்த வேண்டும் என்று ஆசையிருந்தாலும் கூட சோம்பேறித்தனத்தால் அது தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது.
இதோ இன்று பணி நிமித்தமாக ஆந்திராவின் ஐதராபாத்தில் வந்து ஒரு ஆண்கள் விடுதியில் செட்டில் ஆயாச்சு.என் ரூம்-மேட்டாக இருக்கும் ஆந்திர நண்பர் ஒருவரே இந்த வலைப்பூவை இவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்து தினமும் பதிவுகள் பதிவதற்கு முக்கிய காரணம்.அந்த காமெடியை அடுத்த பதிவில் சொல்கிறேனே..
பதித்தது பக்கோடா at 7:52 pm 0 திட்டுக்களும்,பாராட்டுக்களும்
எல்லோருக்கும் வணக்கங்கண்ணா...
இப்போ கொஞ்ச நாளாகத்தான் நமக்கு இந்த வலைப்பூ அறிமுகம்.சில நாட்களுக்கு முன் பொழுதுபோகாமல் கூக்லி நண்பரை சீண்டிபார்க்க ஆசைப்பட்டு தமிழ் மின் புத்தகங்களைக் குறித்துப் துருவிதுருவி பல கேள்விகள் கேட்க அவரோ மனம் வெறுத்து இந்தா நண்பா.. இதை வைச்சுக்கோ. என தமிழ்மணம்,தேன்கூடு முகவரிகளை தந்தார்.(என்னிடம் ரகசியமாய் நண்பா இதை வைத்துதான் நான் இவ்வளவு நாளா வண்டி ஓட்டிகிட்டிருக்கேன்.உன் கேள்விக்கான பதிலெல்லாம் அதில்தான் இருக்கு.. வெளியில் யாரிடமும் சொல்லி பிழைப்பைக் கெடுத்துடாதே நண்பா.. என்றவாறே காலில் விழுந்துக் கும்பிட்டு ஓடோ டிப் போய்விட்டார்.)இப்படிதாங்க எனக்கு வலைப்பூ அறிமுகம்.இங்கே முதன்முதலில் வந்தேன். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.என்னமா கலக்கறீங்க...
முதல் பார்வையில் பெரும்பாலும் வெளிநாட்டுவாழ் இந்தியரும்,இங்கிருந்து பணி நிமித்தமாக சென்றோரும் தாய்நாட்டை பிரிந்த சோகத்தில் தமிழில் எழுதுகிறீர்கள் என நினைத்திருந்தேன். என் நினைப்பை பொய்யாக்கும் விதமாக இந்தியாவிலிருந்து பல எழுத்தாளர்களின் வலைப்பக்கங்கள்.முக்கியமாக எங்கள் ஊர்க்காரர் சிபி அண்ணன்(யாராவது அவர் காதிலே போட்டு வையுங்கண்ணா.. ஊர்க்காரப் பய ஒருத்தன் புதுசா வந்திருக்கான்னு..) இருப்பதை பார்த்ததும் ரொம்பவே சந்தோஷம்.
நமக்கு சின்ன வயசுல இருந்தே ஏதாவது எழுதறுன்னா ரொம்ப இஷ்டம்.அப்பப்போ மனசுல உதிக்கறதையெல்லாம் எதிலாவது கிறுக்கிகிட்டே இருப்பேன்.ஆனால் வெளியே யார்கிட்டயும் காட்டமாட்டேன்.ஏனென்றால் எதையாவது சொல்லி வளரும் அரும்பை முளையிலேயே கிள்ளிவிட்டுட்டாங்கன்னா என்ன பண்றது? அப்படிங்கற பயம்தான். இருந்தபோதிலும் கல்லூரி வந்தவுடன் ஒருசில நெருங்கிய நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்ததுண்டு.
சரி வந்தாச்சு.. ஆரம்பிச்சாச்சு.. என்ன எழுதுறது? யோசிச்சுப் பார்த்தா எதை எழுதினாலும் படிக்கறதுக்கு நீங்க எல்லாரும் இருக்கிங்க.ஒரு தடவை கல்லூரி நாட்களில் சும்மா விளையாட்டுக்கு ஒரு கைரேகை ஜோசியரிடம் கையைக் காட்டப்போக அவரோ தம்பி.. நீங்க பிற்காலத்தில் பெரிய எழுத்தாளரா வருவிங்க... என்று பிட்டைப்போட இதோ இங்கே அதற்கான முதல்படி எடுத்து வைத்தாயிற்று...
பெரியதலைகள் எல்லாம் கொஞ்சம் இந்த தம்பியைப் பார்த்து தட்டிக்கொடுத்து கவனிச்சுக்குங்க. எழுதியதை படித்துவிட்டு பரவாயில்லைன்னு நினைச்சிங்கன்னா நாலு பேர்கிட்ட சொல்லி அப்படியே வந்து ஒரு பார்வை பார்த்துட்டு போகச் சொல்லுங்க.
பதித்தது பக்கோடா at 7:45 pm 0 திட்டுக்களும்,பாராட்டுக்களும்